Friday 16 September 2011

அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்கள்

தமிழகத்திலுள்ள 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ., சைதை துரைசாமி, கோவையில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மதுரையில் முன்னாள் எம்.பி., ராஜன் செல்லப்பா ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்று, பின் மாற்றப்பட்ட சிலருக்கும் மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மாநகராட்சி ஒதுக்கப்படாததால், அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய எட்டு மாநகராட்சிகள் தி.மு.க.,விடமும், திருச்சி, கோவை மாநகராட்சிகள் காங்கிரஸ் வசமும் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ., ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.

அ.தி.மு.க.,வில் 10 மாநகராட்சிகளிலும் அக்கட்சியே போட்டியிடும் என அதிரடியாக அறிவித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடப்பங்கீடு குழு ஒன்றையும் அ.தி.மு.க., அறிவித்திருந்தது. அக்குழு பேச்சுவார்த்தையை கூட்டணிக் கட்சிகளிடம் துவங்கும் முன், அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த சட்டசபைத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி எண்ணிக்கை பங்கீடு மட்டும் முடித்துக் கொண்டு, எந்தெந்த தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்பதை முடிவு செய்யாமல், தனது கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க., வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.பின், கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சு நடத்தி, சில தொகுதிகளை விட்டுக் கொடுத்து, 160 தொகுதிகளில் போட்டியிட்டது. சட்டசபைத் தேர்தல் பார்முலா அடிப்படையில், 10 மேயர் பதவிக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை நேற்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள செ.ம.வேலுசாமி, ராஜன் செல்லப்பா, திருப்பூர் விசாலாட்சி, சசிகலா புஷ்பா ஆகியோருக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, பின் அவர்களின் தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இப்படி சட்டசபைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கப்பட்டும், போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு, மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் சட்டசபை தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு, குறைந்த ஓட்டுகளில் தோல்வியடைந்த சைதை துரைசாமி, சென்னை மாநகர மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment