Wednesday 21 September 2011

15 மயில்கள் சாவு

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே தேசிய பறவைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. இந்த பகுதியில் வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு வந்த போது விதைகள் என நினைத்து சாப்பிட்டபோது விஷமாக மாறியது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மழை வரக்கண்டு தோகை விரித்தாடும் : தேசிய பறவையான மயில்கள் நெல்லை மாவட்டத்தில் அதிகம் வாழ்ந்து வருகிறது. வெப்பமண்டல பகுதிகள், மலையடிவாரம் மற்றும் வயல்வெளிகளில் சுற்றித்திரியும் . “பாசியானிடே “ என்ற பறவை இனத்தை சேர்ந்தவை. இந்தியா மற்றும் இலங்கையில் வாழும் மயில்கள் நீல மயில் என அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் மன்னர்களும், அரசர்களும் பொன்னுக்கு நிகராக கருதி பரிசாக வழங்கி கவுரவித்தனர். இனிமையும் , அழகும் கொண்ட மயில்கள் மழை வரக்கண்டு தோகை விரித்தாடும் போது உள்ளம் அனைவருக்கும் பூரிக்கும். சாதுவான இந்த அழகு மயில் இந்திய தேசிய பறவையாக பெருமை வகிக்கிறது. இதனால் இந்தமயில்கள் இனத்தை வேட்டையாட தடையும் அமலில் உள்ளது.

வயல்வெளிகளில் பயிர்களை தின்ன வருகிறது என்ற காரணத்தினால் புகழ்மிக்க மயில்களை சிலர் விஷம் வைத்து கொன்று வருகின்றனர். கடந்த 6ம் தேதி விருதுநகர் மாவட்டம் வாழவந்தாள்புரத்தில் 12 மயில்கள் வயல்வெளிகளில் வைத்திருந்த பூச்சிமருத்தை தின்று உயிரிழந்தது. இந்தச்சாவு குறித்து மேலோட்டமான விசாரணையுடன் முடிந்ததே தவிர உரிய நடவடிக்கை எதுவும் இல்லாமால் போனது. இந்நிலையில் இன்று சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் விஷ விதை சாப்பிட்ட 15 மயில்கள் இறந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment