Monday 19 September 2011

ஊராட்சி தலைவர் பதவி-தனி "மவுசு'

தேர்தல் அறிவிப்பு வராத நிலையில், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளவர்கள், களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முக்கிய பிரமுகர்களிடம் ஆதரவு திரட்டும் பணியை இப்போதே துவக்கி விட்டனர். உள்ளாட்சிகளில் மாவட்ட கவுன்சிலர், நகராட்சி தலைவர், பேரூராட்சிதலைவர் என, பதவிகள் இருந்தாலும், ஊராட்சி தலைவர் பதவிக்கு கிராமப்புறங்களில் தனி "மவுசு' உள்ளது. தலைவர் பதவியை கைப்பற்ற, நிர்ணயிக்கப்பட்ட செலவு தொகையையும் மீறி வாரி இறைப்பவர்களும் உண்டு.
"தொண்டு' க்கு ஆர்வம்: அடுத்த மாதம் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் கிராமப்புறங்களில் களை கட்ட துவங்கியுள்ளது. மக்களுக்கு தொண்டு செய்வதற்காக (!), போட்டியிட திட்டமிட்டுள்ளவர்கள், ஊராட்சி பகுதி குக்கிராமங்களில், முக்கிய பிரமுகர்களை சந்தித்து, ஆதரவு கேட்டு வருகின்றனர். முதல் சுற்றில் பரவலாக ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், நிச்சயமாக களம் காண, தயாராகி வருகின்றனர்.

"தாஜா': போட்டியில் உறுதியாக இருப்பவர்கள், போட்டியிட திட்டமிட்டுள்ளவர்களிடம், "இந்த முறை விட்டுக் கொடுக்கவேண்டும்,' என, "தாஜா' செய்யும் பணியில் இறங்கியுள்ளனர். தேதி அறிவிப்பு வெளிவரும் முன்னே, கிராமங்களில் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது. தற்போதைய தலைவர்கள் பலர், மீண்டும் களம் காண முடிவு செய்து, ஊராட்சிகளில் உள்ள குறைபாடுகளை, சொந்த செலவில் சரி செய்யவும் தயாராகி வருகின்றனர்.
நான்கு மாதங்களாக ஊராட்சிகளுக்கு, மாநில அரசின் நிதி வழங்கப்படவில்லை. இதனால் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாமல், தலைவர்கள் சிக்கலில் உள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி, புதிதாக களம் காண்போர், நம்பிக்கையுடன் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment