Wednesday 21 September 2011

முன்னாள் அமைச்சரின் பி.ஏ., ரகளை

திருச்சி மேற்குத்தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கலின்போது, தி.மு.க., முன்னாள் அமைச்சரின் பி.ஏ., ரகளையால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர், 40வது வார்டு, தி.மு.க., செயலாளர் முத்துச்செல்வம். முன்னாள் அமைச்சர் நேருவின் அலுவலக உதவியாளர். நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்கு தனியாளாக வந்தார்.அப்போது, வேட்பாளர் பரஞ்ஜோதி, அமைச்சர் சிவபதி, மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ., மனோகரன், எம்.பி., குமார் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளே சென்றிருந்தனர். முன்புற கேட்டை சாத்திய போலீஸார், பத்திரிக்கையாளர்கள் தவிர மற்றவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

முத்துச்செல்வத்தையும் போலீஸார் உள்ளே விடவில்லை. "தான் வேட்புமனு வாங்க வந்திருப்பதாக கூறிய அவர், உடனே உள்ளே விடுங்கள்' என்று போலீஸாரிடம், கூறினார். "அ.தி.மு.க.,வினர் மனுத்தாக்கல் செய்வதால் உள்ளே விட முடியாது' என்றனர்."நீங்களாக உள்ளே விடுகிறீர்களா? அல்லது நானாகவே கதவை திறந்து கொண்டு செல்லட்டுமா? என்றார். பின்னர் அவராகவே "நிலைமை' உணர்ந்து அங்கிருந்து சென்றுவிட்டார்.சம்பவம் குறித்து முத்துச்செல்வம் கூறியதாவது:
நான் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வேட்பு மனு வாங்கச் சென்றேன். அ.தி.மு.க., வேட்பாளர் ஆர்.டி.ஓ.,விடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

நான் கிளார்க்கிடம்தான் மனு வாங்க வேண்டும்.அ.தி.மு.க., மனுத்தாக்கலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் மனுவை வாங்கி, உடனடியாக கடலூர் மத்தியச் சிறைக்கு சென்று, அங்குள்ள சிறை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று, நேருவை சந்திக்க வேண்டும்.நல்ல நேரம் முடிந்துவிடும் என்பதற்காக அல்ல. கடலூர் செல்ல தாமதாகிவிடும் என்பதால், உடனே உள்ளே விடுங்கள் என்று போலீஸாரிடம் கேட்டேன். இன்ஸ்பெக்டர், ஏ.சி.,யிடம் கேட்க வேண்டும் என்று எனது நேரத்தை வீணடித்தனர்.
"நீங்களாக என்னை விடவில்லை என்றால் நானாகவே கதவை திறந்து உள்ளே சென்று விடுவேன்' என்றேன். அதற்கும் அவர்கள் மசியவில்லை. கடைசியில், அ.தி.மு.க., வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் செய்து விட்டு சென்ற பின்பு தான், என்னை வேட்புமனு வாங்க விட்டனர். நான் அங்கு ரகளையெல்லாம் செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment