Friday 23 September 2011

மாமூல் பணத்தில்தான் போலீஸ் ஸ்டேஷன்

தமிழகத்தில், அரசு நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை, காலதாமதம் ஏற்படுத்தும் நிர்வாக நடைமுறை, அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட காரணங்களால், போலீஸ் ஸ்டேஷன்களில் லஞ்ச முறைகேடுகள் அதிகரித்துள்ளன. "லஞ்சம், மாமூல் பணத்தில்தான் போலீஸ் ஸ்டேஷன்களே இயங்குகின்றன' என, போலீசாரே ஒப்புக்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுவிட்டது.
தமிழகம் முழுவதும் 1,295 சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள், 196 பெண் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் "நிரந்தர நிதி' (பர்மனென்ட் பண்ட்) என்று 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. வழக்கில் கைது செய்யப்படும் நபர்களுக்கு உணவு வழங்குதல், வழக்கு விசாரணை உள்ளிட்ட செலவினங்களுக்கு இந்நிதியை பயன்படுத்தலாம் என்பது உத்தரவு. ஆனால், இந்நிதியை செலவழித்தபின், அதற்குரிய கணக்குகளை ஆதாரத்துடன் மாநகர போலீஸ் அல்லது மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். செலவினங்கள் முறையானதா என ஆராயப்பட்டு, உயரதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட பிறகே அடுத்ததாக தொகை வழங்கப்படும். இதற்கான நிர்வாக நடைமுறைகள் பெரும்பாலும் தாமதமாகி, ஓரிரு மாதங்கள் கழிந்த பிறகே மீண்டும் "நிரந்தர நிதி' வழங்கப்படுகிறது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் திடீர் செலவினங்களை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரே ஏற்றாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது. எனவே இன்ஸ்பெக்டரோ, ஸ்டேஷன் போலீசாரோ தங்களது ஊதியத்தில் இருந்து நிச்சயமாக செலவழிக்க முடியாது. வழக்கு விசாரணைக்காக வருவோர், பாஸ்போர்ட் விசாரணைக்கு வருவோரிடம் லஞ்சம் பெற்றும், பல்வேறு வழிகளில் மாமூல் பெற்றும் ஈடுகட்டப்படுகிறது.

என்னென்ன செலவு: கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, சென்னை போன்ற மாநகரங்களில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன்களை நிர்வகிக்கவே இன்ஸ்பெக்டர்களுக்கு மாதம் தோறும் தலா 10 ஆயிரம் ரூபாய் அவசியத் தேவையாகிறது என கூறப்படுகிறது.
*அரசு ஜீப்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் அளவுக்கும் அதிகமாக மாதம் தோறும் டீசல் செலவாகிறது.
* ஜீப் பழுதாகும்போது, அரசு ஒர்க்ஷாப்பில் சரிசெய்து கொள்ளும் வாய்ப்பு உள்ள போதிலும், அங்கு வாகனத்தை விட்டால் பழுது நீக்க பல நாள் இழுத்தடிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறு, சிறு பழுதுகளை சரி செய்துகொள்ள தனியார் ஒர்க்ஷாப்பையே நாடுகின்றனர்.
*தலைமறைவு குற்றவாளிகளைத் தேடி போலீஸ் குழு வெளியூர் செல்லும்போது நாள் கணக்கில் தங்க நேரிடுகிறது. தங்குமிடம், உணவு, போக்குவரத்துச் செலவுத் தொகைகள் முழுமையாக அரசு தரப்பில் வழங்கப்படுவதில்லை. அந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியே "ஏற்பாடு' செய்ய வேண்டியுள்ளது.
*குண்டர் சட்டத்தில் ஒருவரை கைது செய்யும்போது அதற்கான ஆவணங்களை தயாரிக்க 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதாகவும், உத்தரவு பிறப்பிக்கப்படும் அலுவலகத்தின் ஊழியர்களுக்கு லஞ்சம் தரவேண்டியிருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
*போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஜெராக்ஸ் மெஷின், கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பராமரிப்புத் தொகை வழங்கப்படுவதில்லை. காகிதம், பிரிண்டருக்கான காட்ரிஜ் மற்றும் பழுதுநீக்கும் செலவுகளை போலீசார் லஞ்சம், மாமூல் பணத்தில் ஈடுகட்டுகின்றனர்.
*போலீஸ் ஸ்டேஷனில் துப்பரவு ஊழியர் நியமிக்கப்படவில்லை. இதனால், "மாற்று ஏற்பாடு' செய்து மாதம் குறைந்தது 1,000 ரூபாய் ஊதியத்துக்கு போலீசாரே ஆட்களை நியமித்துள்ளனர்.
*போலீஸ் ஸ்டேஷனுக்கான லேண்ட் லைன் டெலிபோன் இணைப்பு மற்றும் இன்ஸ்பெக்டருக்கான மொபைல்போன் கட்டணத் தொகை வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்கும் அதிகமாகவே செலவு ஏற்படுகிறது.
*காகிதம், கார்பன் ஷீட் உள்ளிட்ட எழுது பொருட்களும், எப்.ஐ.ஆர்., தவிர்த்த சில ஆவணங்களும் சரிவர சப்ளை செய்யப்படுவதில்லை. வெளிக்கடைகளில் இருந்தே போலீசார் விலைக்கு வாங்குகின்றனர். இவை உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் ஏற்படுவதாக கூறும் போலீசார், மாநகர எல்லைக்குள் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றுக்கு மாதம் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயும், புறநகர் பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாதம் 5,000 ரூபாயும் செலவாவதாக தெரிவிக்கின்றனர்.

லஞ்சமே பிரதானம்: ஒரு போலீஸ் ஸ்டேஷனை நிர்வகிக்க மாதம் தோறும் குறைந்தது 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இன்ஸ்பெக்டர்களுக்கு செலவாவதாக கூறப்படுகிறது. இத்தொகையை ஈடுசெய்ய ஸ்டேஷன் "ரைட்டர்' மூலமாக பல்வேறு வகைகளிலும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறி இரவு 10.00 மணிக்கு மேல் செயல்படும் "டாஸ்மாக்' மதுக்கடை மற்றும் பார்களில் இருந்து மாதம் தோறும் மாமூல் வசூலிக்கின்றனர். வழக்கு விசாரணைக்காக வருவோரிடமும், பாஸ்போர்ட் விசாரணைக்காக வருவோரிடமும் லஞ்சம் பெறப்படுகிறது. ஓட்டல், லாட்ஜ், தள்ளுவண்டி கடை, நடைபாதை கடைகள் உள்ளிட்ட வகைகளிலும் மாத மாமூல் வசூலிக்கின்றனர். இத்தொகைகள் அனைத்தும் ஸ்டேஷன் "ரைட்டர்' வழியாக இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தொகை மட்டும் ஸ்டேஷன் நிர்வாகச் செலவுக்கு ஒதுக்கப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கையில் போலீஸ் ஸ்டேஷன்களில் லஞ்சம், மாமூல் முறைகேடுகள் எப்படி ஒழியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் "தரத்தை' மூன்று விதமாக பிரிக்கலாம். முதல் வகை அதிகாரி நேர்மையானவர்; அவர், மக்களிடம் இருந்தோ, வேறுவழிமுறைகளிலோ லஞ்சம், மாமூல் பெறாதவர். எனினும், ஸ்டேஷன் நிர்வாகச் செலவு உள்ளிட்ட காரணங்களுக்காக சக போலீசார் மாமூல், லஞ்ச முறைகேடுகளில் ஈடுபடும் போது கண்டுகொள்ள மாட்டார். அவ்வாறு இருந்தால் மட்டுமே ஸ்டேஷனை நிர்வாகம் செய்ய முடியும் என்பதை நன்கு அறிந்தவர்.இரண்டாம் வகை அதிகாரி, தனக்கு "தானாக வந்து சேரும்' மாமூல், லஞ்ச பணத்தை மட்டுமே ஏற்றுக்கொள்பவர். "பணம் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பேன்' என்று அடாவடி செய்யாதவர். மூன்றாம் வகை அதிகாரி, "தொட்டதற்கெல்லாம் பணம்' என்ற தீவிர முறைகேட்டில் ஈடுபடுபவர். இவர்களில் முதல்வகை அதிகாரியே "மிக நேர்மையானவர்' என அழைக்கப்படுகிறார். ஆனால், இவர் தன்னை மட்டுமே பணியில் நேர்மையானவராக நிலை நிறுத்திக்கொள்ள முடியுமே தவிர, தனக்கு கீழ் பணியாற்றும் போலீசாரின் "கையை கட்டிப்போட' இயலாது. மாமூல், லஞ்சத்தை தடுத்தால் போலீஸ் ஸ்டேஷன் நிர்வாகச்செலவினங்களுக்கான தொகையை, இவரே கொடுத்து ஈடுகட்ட வேண்டிய நிலை ஏற்படும். மாமூல், லஞ்சம் இல்லாமல் போலீஸ் ஸ்டேஷன் இயங்காது என்பது கசப்பான உண்மை.

இந்நிலை மாறவேண்டுமெனில், ஸ்டேஷன் நிர்வாகச் செலவினங்களுக்கான தொகை மற்றும் அடிப்படை தேவைகள் அனைத்தும் அரசால் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அடிப்படைகள் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தால் லஞ்ச முறைகேடுகளை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும்.இவ்வாறு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கோவை போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "லஞ்சம், மாமூல் முறைகேடுகளுக்கு போலீசார் பொருத்தமற்ற காரணங்களை கூறுவதை ஏற்க முடியாது. போலீஸ் துறையில் ஏற்படும் செலவுகள் ஒவ்வொன்றுக்கும் முறையான கணக்கு ஆவணங்களை சமர்ப்பித்தால் அரசிடம் இருந்து பெற முடியும். இதற்கான நடைமுறைகளில் காலதாமதம் ஏற்படுகிறது என்பது உண்மைதான். அதற்காக மாமூல் பணத்திலும், லஞ்ச பணத்திலும்தான் போலீஸ் ஸ்டேஷனை இயக்க முடியும் என்ற நிலையை போலீசார் ஏற்படுத்த முயற்சிப்பதும், காரணங்களை தெரிவிப்பதும் சரியல்ல; ஒருபோதும் ஏற்க முடியாது' என்றார்.

எங்கே போகிறது "எஸ்.ஆர்.,' தொகை?தமிழகத்தில் மாநகர போலீஸ் மற்றும் மாவட்ட போலீசை நிர்வகிக்கும் உயரதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் பல லட்சம் ரூபாய் "எஸ்.ஆர்.,தொகையாக' (சீக்ரெட் ரிவார்டு) ஒதுக்கப்படுகிறது. முக்கிய வழக்குகளின் ரகசிய விசாரணைகளுக்கும், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் துப்பு கொடுக்கும் நபர்களுக்கும், உளவுத்தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கும் இத்தொகையில் இருந்து உயரதிகாரிகள் பணம் வழங்கலாம். அதற்கு எவ்விதமான தணிக்கையும் கிடையாது. அந்த தொகை யாருக்கு வழங்கப்பட்டது, எப்போது வழங்கப்பட்டது என்பது தொடர்பான கணக்கு விபரங்களையும் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

போலீஸ் உயரதிகாரிகளில் பலரும் இத்தொகையை தங்களது பொறுப்பில் வைத்து முறையாக கையாளுகின்றனர். தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் உளவுப் பிரிவுகளுக்கும், முக்கிய வழக்கு விசாரணைக்கும் கொடுக்கின்றனர். மேலும், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு "வெகுமதியும்' வழங்குகின்றனர். ஆனால் சில அதிகாரிகள் இந்த தொகையை தங்களது "இரண்டாவது சம்பளமாக' கருதி பதுக்கிக் கொள்வதாக போலீசார் புலம்புகின்றனர்.

No comments:

Post a Comment